Saturday, June 26, 2010

முருகனுக்கு அரோகரா...

கடந்த இரு வாரங்களுக்கு முன் என் பதினோரு மாத மகளுக்கு முடிகாணிக்கை செலுத்த (வழக்கம்போல மனைவின் வேண்டுதல்தான்) பழநிக்கு போயிருந்தேன்.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் இதே போல மகனுக்கும் முடிகாணிக்கை செலுத்த சென்ற போது நேர்ந்த சில கசப்பான அனுபவங்களால், இந்த முறை கொஞ்சம் தெளிவாக கடவுளை மட்டுமே தரிசித்து வருவதாக திட்டமிட்டு தொடங்கியது பயணம்.

மாசி மகத்தை முன்னிட்டும், ஞாயிற்றுக்கிழமையின் ஆதிக்கமும் மின்இழுவை இயந்திரத்தில் செல்ல நின்ற வரிசையால் (ஐம்பது ரூபாய் சிறப்பு கட்டணத்திலும் குறைந்தபட்சம் நர்ன்கு மணி நேர காத்திருக்க வேண்டும்) யானைபாதை படிக்கட்டுகளின் வழியாக மாறியது மலை மேலே செல்லும் பயணம்.

பொது தரிசனத்திற்கும், பத்து ரூபாய் தரிசனத்திற்குமான வரிசையால் (குறைந்தபட்சம் மூன்று மணிநேர காத்திருப்பு) நூறு ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டை எடுத்து அங்கு போனால் என்னைப்போலவே பல மனிதர்களின் மனநிலையால் அங்கும் காத்திருத்தல் என்பதன் கட்டாயத்தில் ஒன்றரை மணி நேர அவஸ்தையான நிமிடங்கள்.

சன்னதியில் இருக்கக் கிடைக்கும் அந்த சொற்ப வினாடிகளுக்குள் தனது மனதின் அத்தனையும் கொட்டித்தீர்த்துவிடக்கூடிய மனநிலையிலும், கட்டாயத்திலும் இருக்கும் மனிதர்களை நகர்த்துவதைத்தவிர வேறொன்றும் அறியாததுபோல இயந்திரமாய் இருந்த மனிதர்களும், அதைவிட அதிகமாய் வரும் மக்களின் காணிக்கையிலே குறியாய் இருக்கும் ...

எல்லாவற்றையும் மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கும்.. முருகன்..

நல்ல வேளையாக எனக்கும் கடவுளுக்குமான இடைவெளி மிக அதிகமாக இருந்ததால் மனிதர்களின் அந்த நிமிடத்து உணர்வுகளை எனக்கு உள்வாங்கிக் கொள்ள கிடைத்த இன்னொரு வாய்ப்பாகவே இந்த பழநியின் மற்றுமொரு பயணம்.
ஒரே ஒரு ஆறுதலான விஷயமாக நான் பார்த்தது..
வெய்யிலின் உக்கிரத்திலிருந்து நமது பாதங்களை சற்றே ஆசுவாசப்படுத்த மலைப்படிகளின் ஒரு பகுதியில் பிளாஸ்டர் ஆப் பாரீசின் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது.

கட்டயாம் சந்திக்க வேண்டியவை
• முன் பின் அறிமுகமே இல்லையென்றாலும் கோவிலுக்கு இந்த வழியாக செல்லுங்கள் என பேருந்து நிலையத்தில் இருந்து வெளிப்படும் குடும்ப உறுப்பினர்களை வழி நடத்தும் மனிதர்கள். (குதிரை வண்டி உரிமையாளர்கள்? வியாபார தந்திரம்)
• வயதான மனிதர்களின் மேற்பார்வையில் வயதான குதிரைகள் இழுத்துச் செல்லும் குதிரை வண்டிப்பயணம்.
• "கோயிலுக்கு செருப்புப் போட்டுட்டு போகக்கூடாது எங்க கடையில விட்டுட்டு பூஜை சாமான் வாங்கிட்டுப் போங்க... செருப்பு பார்த்துக்க காசு வேணாம்..."
• "சாதாரணமா 40 வாங்கறோம், நல்லபடியா முடி எடுத்துத் தர்ரேன் பார்த்து போட்டுக்குடுங்க..சார். "
• ரோட்டில் நடக்கும் நம்மை வழிமறித்து சிறிய வேல் ஒன்றை நமது கையிலோ அல்லது காவடி எடுத்து வந்தால் காவடியிலோ செருகி விட்டு முடியில்லா தலையில் சந்தனம் பூசி "முருகா நல்லபடியா இவங்க குடும்பத்தை காப்பாத்து" என பத்து ரூபாய்க்கும் அதிகமாய் வாங்கும் வியாபார மனிதர்கள்.
• காலணிகள் பாதுகாக்கும் இடத்தில் நின்ற காத்திருத்தல் வரிசையும்
• ருசியில்லா இயந்திர பஞ்சாமிர்தம்
• குடும்ப சகிதம் வந்திருந்து படிகளிலோ மரங்களின் அடியிலோ கட்டுச்சோற்றை ருசிக்கும் மனிதர்கள்.
இன்னும் நிறைய...

Sunday, March 14, 2010

தலைகவசத்தின் அருமை

கடந்த சில மாதங்களுக்கு முன் என் அலுவலக நண்பருக்கு நடந்த சம்பவமிது.

ஓரு ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடனிருந்த அவரை அவரது சகோதரி அழைத்து தன்னை வீட்டில் விடுமாறு கூறினார். பேருந்து நிலையத்திலிருந்து அவரை வீட்டில் விட்டுவிட்டு நண்பர்களிடத்து திரும்பும் வழியில் ரோட்டில் நடந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி திடீரென ரோட்டை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க நண்பர் தனது வண்டியை ரோட்டிலிருந்து கீழே இறக்க முயல வண்டி அவரது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
மூக்கிலிருந்து வழிந்த ரத்தத்தில் பயந்துபோன அக்கம்பக்கத்துகாரர்களும் நண்பர்களும் அவசர சிகிச்சை செய்து நகரத்திலுள்ள பிரபல மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் அனுமதித்தனர்.

கண்களுக்கு கீழ் உள்ள எலும்புகள் நொறுங்கி செயற்கை எலும்புகளை பொருத்தியிருக்கிறார்கள். கை,கால்களில் கணிசமான காயங்களும் அடக்கம்.
தலையை பிளந்து தைத்திருந்தார்கள். கண்பார்வையும் கணிசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் மூன்று வாரங்களுக்கு மேலான சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளிவரும்போது சுமார் 2 லட்சங்களும், தீராத தலைவலியுடனும் நிறைய மனவலியுடனும் இருந்தார் நண்பர்.

கடந்த மாதம் அவரின் வீட்டில் சென்று பார்த்தபோது கொஞ்சம் தேறியிருந்தார்.
கணிணி தொடர்பான வேலை என்பதால் இன்னும் சில வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள்...

விபத்திற்கான முக்கிய காரணமாக நான் கருதுவது தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாதது.

அவ்வப்போது போக்குவரத்து போலீசுக்கு பயந்து தரமற்ற தலைக்கவசம் அணிந்தும், அதை வண்டியின் பின்பக்கத்திலும், கண்ணாடியிலும், முன்பக்கத்தில் வைத்தும் சட்டத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் மக்களே... கவனம்..

தலைக்கவசத்தின் அருமை குறித்து ஊடகங்களும், பொது நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களும் ஆயிரம் முறை கூறினாலும்...

Friday, December 25, 2009

நூல் அறிமுகம்


கடந்த 20ம் தேதி நடவு வெளியீட்டின் 7வது வெளியீடாக வெளிவந்துள்ள நண்பர் நிலா கிருஷ்ணமூர்த்தியின் ‘கழிந்த நிமிஷங்களின் மௌனங்கள்’ கவிதை தொகுப்பு வெளியீடு கோவையில் நடந்தது.
நூலிலிருந்து சில கவிதைகள்

*

அப்பாவின் தோளிலோ
அம்மாவின் இடுப்பிலோ
பாட்டியின் கக்கத்திலோ
அமர்ந்து
பேருந்தில் ஏறும்
குழந்தைகளின் அழகை
ரசிக்க எண்ணாமல்
வயதை கணக்கிடுவதில்
முந்திக் கொள்கிறது
நடத்துனர் மனசு

கூட்டிப் பெருக்கிப்போட்ட
சில நொடிகளில்
உதிர்த்திடும் தன் பூக்களை

இலைகளை கீரையாய்
பூக்களை பொறியல்களாய்
காய்களை குழம்பு வைத்து
சுவைக்கும் நாக்குகள்

பருவம் தப்பிய வருஷத்தில்
இலைகள் மட்டுத் தாங்கி நிற்கும்
மலடாய் சில மாதம்

மனசின் உதாசீனமாய்
துண்டிக்கப்படும்
மரத்தின் கிளைகள்

அடுத்த துளிர்ப்பிக்காய்
சொரியும் ஈர ரத்தத்தில்
தொடங்கும் வாழ்வு

Saturday, November 1, 2008

முயற்சி

நண்பர் பாலபாரதி வலைத்தளத்தில் செய்து வரும் அளப்பரிய செயல்களை கண்டு பல முறை வியந்ததுண்டு. அவரின் வலைத்தளம் மூலம் பல இணைப்புகள் கண்டு வெதும்பியத்தின் விளைவே இந்த முயற்சி. நானும் வலைத்தளத்தை கொஞ்சம் குழப்ப போறேனே